சிறப்பு கட்டுரைகள்

2015 வந்தது செயற்கை வெள்ளம், இது இயற்கை வெள்ளம்.. ஆயிரக்கணக்கான கோடியை நிவாரணமாக கேட்கும் ஸ்டாலின்

ரணகளமான சென்னையை சரி செய்ய ஆயிரக்கணக்கான கோடியை நிவாரணமாக கேட்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்.

By · 05 டிசம்பர் 2023 · Updated 07 மார்ச் 2026
flood-stalin

Tamil Nadu Chief Minister Stalin: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கன மழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போய் உள்ளது. வரலாறு காணாத மழை வெள்ளத்தை சந்தித்த போதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஒப்பிடும்போது தற்போது மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு மிக அதிகம். சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போதும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 119 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். இருந்தாலும் இது நடந்திருக்க கூடாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான கோடியை நிவாரணமாக கேட்கும் தமிழக முதல்வர்

மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பின்பு சென்னை செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி இப்போது வைரலாக பேசப்படுகிறது. இதில் ரூபாய் 4000 கோடி மதிப்பில் ஏற்படுத்திய மழைநீர் வடிகால் பணிகளால் தான் வரலாறு காணாத மழையிலும் பாதிப்புகள் மிகக் குறைவாக இருந்திருக்கிறது என்று கூறினார்.

மேலும் மழை வெள்ள பாதிப்பிற்காக மத்திய அரசிடம் ரூபாய் 5000 கோடியை நிதி உதவியாக கேட்கப் போகிறாராம். நாடாளுமன்றத்திலும் திமுக எம்எல்ஏக்கள் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் இன்று வலியுறுத்துவார்கள் என்றும் முக ஸ்டாலின் தெரிவித்தார்.

இவருடைய இந்த பேட்டியை கேட்ட பிறகு, 2015 ஆம் ஆண்டு ஏற்பட்டது செயற்கை வெள்ளம் தான், இப்போது ஏற்பட்டு இருப்பது தான் இயற்கை வெள்ளம் என்று சொல்வது போல் இருக்கிறது. ஆனால் எட்டு வருடத்திற்கு முன்பு என்ன நிலைமை இருந்ததோ அதே தான் இப்போதும் இருக்கிறது என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.