சிறப்பு கட்டுரைகள்

விஜயகாந்த்னாலயே ஒண்ணும் முடியில.. விஜய் வந்து என்ன பண்ணுவாரு? நறுக்குனு கொட்டு வைச்ச பிரபல நடிகர்

By · 26 செப் 2024 · Updated 07 மார்ச் 2026
kamal -vijay-vijayakanth

தமிழ்நாட்டு மக்களில் பலர் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காமல் இருக்கும் நிலையில் புதிதாக யாராவது அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரமாட்டார்களா? தன் தேவைகளை நிறைவேற்ற மாட்டார்களா? சினிமாவில் ஊழலை ஒழிப்பதுபோல் புரையோடிப்போன ஊழலை ஓரங்கட்டிவிட்டு தேவதூதர்போல் தங்களுக்கு தெரிந்து, விருப்பமானவர்களே கூட அரசியல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற மாட்டார்களா? என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தாமல் இல்லை.

ஆனால், ஐம்பதாண்டுகளாக தமிழ் நாட்டில் திராவிட அரசியல் ஊறிப்போயுள்ள நிலையில், மேற்சொன்னபடி கேள்வி எழுப்பியவர்களின் வீடுகளில் ஒருவராவதும் திராவிடப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர்களாகத்தான் இருப்பர். அப்படித்தான் இன்றுவரை திராவிட கட்சிகளில் திமுக- அதிமுக மாறி மாறி மக்களின் வாக்குகளில் ஆட்சியைப்பிடித்து வருகின்றன.

இவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக தோன்றிய பாரிவேந்தரின் ஐஜேகே, விஜயகாந்தின் தேமுதிக, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கமல்ஹாஸனின் மக்கள் நீதி மய்யம் இவையெல்லாம் திராவிட அரசியலில் பக்கம் ஒதுக்கியதை கடந்த காலங்களில் பார்த்தோம். தற்போது ஐஜேகே பாஜகவோடு இணைந்து பணியாற்ற, சரத்குமார் தன் கட்சியை பாஜகவில் இணைத்துவிட்டார். தேமுதிக அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டது தேர்தலில், காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் இணைந்து கமல் கட்சி பணியாற்றி வருகிறது.

திராவிட கட்சிகளை எதிர்த்து எந்தக் கட்சிகளும் ஆட்சியமைக்க முடியாது என்ற சூழலை தமிழக அரசியலில் வளர்த்துவிட்டதும் இதே மக்கள்தான். இந்த நிலையில், ஏற்கனவே சினிமாவில் நட்சத்திரங்களாக இருந்து அரசியல் கட்சி விஜயகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலில் சறுக்களை சந்தித்த நிலையில், விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

அரசியலுக்கு அவர் புதிது; அவர் கட்சியில் உள்ளவர்களுக்கும் புதிது. இந்த நிலையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதுவாழ்கை மக்களுக்கு அளிக்க புரட்சி பாடலை வெளியிட்ட அவர் என்னென்ன கொள்கைகள்? என்னென்ன திட்டங்கள் வைத்து வரும் 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க கனவு கண்டு கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கும் தவெக முதல் மாநாட்டில் இதற்கு விஜய் பதிலளிக்கக்கூடும்!

இந்த நிலையில், விஜயின் அரசியல் வருகை பற்றி திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் போஸ் வெங்கட் கருத்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது: ” அரசியலுக்கு கமல் சார் வருகிறார். அவர் வந்தபோது பெரிய கிளர்ச்சி இருந்தது. ஆனால் தற்போது இந்தியா கூட்டணிக்குள் இணைந்துவிட்டார். விஜயகாந்த் வந்தபோது அரசியலில் ஜெயிப்பார் முதல்வராவார் என்று எதிர்பார்த்தனர். அவரும் கூட்டணிக்குள் அடங்கிவிட்டார்.

இதை உடைத்துவிட்டு புதிதாக வர முடியாது. திமுக, அதிமுகவில் இருந்து யாரும் அக்கட்சியில் சேர மாட்டார்கள் இளைஞர்கள்தான் வருவர். விஜய் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்? இங்குள்ள ஓட்டு வங்கி ஸ்ட்ராங்கானது. ஒருவேளை அவர் ஓட்டு வங்கியை சேர்க்கவேண்டுமென்றால் தொடர்ந்து பயணிக்க வேண்டும். கொள்கை, திட்டம் மக்களுக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.